கதம்பம்

பார்த்ததும், கேட்டதும், படித்ததும்,

வீடு தோறும் பெண்களுக்கு இலவசமாக கிரைண்டர் அல்லது மிக்ஸி வழங்கப்படும்’’ என்பதில் ஆரம்பித்து, ‘‘ஏழைகளுக்கு ரேஷன் மூலமாக மாதம்தோறும் முப்பத்தைந்து கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும்...’’ என்பது வரையில் இலவசங்களை சகட்டுமேனிக்கு தன்னுடைய தேர்தல் அறிக்கையில் வாரித் தெளித்திருக்கிறது தி.மு.க. தலைமை.


வாக்காளர்கள் மத்தியில் வரவேற்பையும், விவாதத்தையும் ஏற்படுத்தியிருக்கும் இந்த தேர்தல் அறிக்கை பற்றி, பொருளாதார வல்லுநர்கள் என்ன நினைக்கிறார்கள்?


சென்னையின் பிரபல ஆடிட்டரும் பொருளாதார வல்லுநருமான எம்.ஆர். வெங்கடேஷை சந்தித்து, தி.மு.க. தேர்தல் அறிக்கையைப் பற்றிய கருத்து 
 
‘‘முதலில் குஜராத் விஷயத்தைச் சொல்லிவிட்டு தமிழகத்துக்கு வருகிறேன்... 2007&ம் ஆண்டு குஜராத்தில் சட்டமன்றத் தேர்தலின்போது பி.ஜே.பி.யின் நரேந்திர மோடியை வீழ்த்துவதற்காக, வீடுதோறும் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கப் போவ-தாக அறிவித்தது காங்கிரஸ்.


இதுபற்றி நரேந்திர மோடியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ‘நான் இலவசம் எல்லாம் தரமாட்டேன். அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை கட்டாதவர்களுக்கு உடனடியாக நோட்டீஸ் அனுப்பப் போகிறேன்... வரி செலுத்தாதவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைக்கு உட்படுத்துவேன்... இலவசத்தைக் கொடுத்து மக்களை கெடுத்து ஆட்சிப் பொறுப்புக்கு வர மாட்டேன்...’ என்று சொன்னார்.


எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள். ஒரு சிலர், ‘ஆணவத்தின் உச்சத்தில் இருந்து நரேந்திர மோடி பேசுகிறார்...’ என்று கூட விமர்சனம் செய்தார்கள். ஆனால், அது குறித்தெல்லாம் அவர் கொஞ்சமும் கண்டுகொள்ளவில்லை. தான் ஆட்சிப் பொறுப்பில் இருந்து செய்த சாதனைகளை மட்டும் சொல்லி, ஓட்டுக் கேட்டார். பெரும் வெற்றி அடைந்தார்.


அப்படிப்பட்ட குஜராத் எங்கே? ‘வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியை வாங்கியாச்சு... அடுத்து என்ன இலவசம்’ என்று காத்திருக்கும் தமிழகம் எங்கே?’’ என்று வருத்தப்பட்ட வெங்கடேஷ் தொடர்ந்தார். ‘‘ஏற்கனவே ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான கடன் சுமையில் தத்தளித்துக் கொண்டிருக்கும் தமிழக அரசு நிர்வாகம், கடனுக்-கான வட்டியாக மட்டும் வருடத்துக்கு பத்தாயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் செலுத்திக் கொண்டிருக்கிறது. அப்படியென்றால், தமிழகம் பொருளாதார ரீதியில் எவ்வளவு கீழான நிலைமைக்குச் சென்று கொண்டிருக்-கிறது என்பதைப் பாருங்கள்.


நாட்டின் கடன் என்றாலும், அது ஒவ்வொரு தனிமனிதனுக்குமான கடன்தான் என்பதை நாம் யாரும் இன்னும் உணரவில்லை. அப்படி உணர்ந்தால் இலவசங்களைத் தேடி ஓடமாட்டோம்.


அடுத்த தலைமுறைக்கு கடனை சுமத்தாமல் இருப்பதுதான் நல்ல பெற்றோரின் கடமை. ஆட்சியாளர்களுக்கும் இது பொருந்தும்தானே..? ஆனால், இன்றைய ஆட்சியாளர்கள் பல தலைமுறைகளையும் சேர்த்து கடன்-காரர்களாக்கியிருக்கிறார்கள்’’ என்று பொதுவாக சொன்ன வெங்கடேஷ், தி.மு.க.வின் தேர்தல் அறிக்கைக்கு வந்தார்.


‘‘தி.மு.க. தேர்தல் அறிக்கையில் நாட்டின் உற்பத்தியைப் பெருக்கி, வளமான வாழ்வுக்கு வழிகோலாமல், மிக்ஸியையும் கிரைண்டரையும் இலவசமாக வழங்கி, வாக்காளனை பிச்சைக்காரனாக வைத்திருக்கவே திட்டமிட்டிருக்கிறார்கள். ஏற்கனவே வழங்கப்பட்ட இலவச தொலைக்-காட்சிக்கு சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் வரை செல-வழிக்கப்பட்டதாக சொல்கிறார்கள். இந்த 5 ஆயிரம் கோடி ரூபாயை வைத்து காவிரி, தாமிரபரணி, சிறுவாணி போன்ற தமிழக நதிகளை இணைத்திருந்தால், தமிழ-கத்தின் பொருளாதாரம் மேம்பட்டிருக்கும். விவசாயம் காப்பாற்றப்பட்டு, நீண்டகால பொருளாதார மேம்பாடு கண்டிருக்கலாம். தமிழகத்தின் அறுபது சதவீத மக்கள் விவசாயத்தை நம்பித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் துறையில் சென்னை பிரதான இடத்தைப் பெற்றிருக்கிறது. ஆனால், அந்தத் துறையை தமிழகத்தின் பிற நகரங்களுக்கும் விரிவு-படுத்தும் எந்த திட்டமும் இல்லை.


உற்பத்திப் பெருக்கம், கட்டுமானம், கல்வி, தொழில், சாலை வசதி, போக்குவரத்து வசதி, உயர் கல்வி வசதி, தொழில் கல்வி, சுகாதார மேம்பாடு இப்படி எந்த விஷயத்திலும் அடிப்படை கட்டுமானங்களை ஏற்படுத்தி பலப்படுத்துவது குறித்தும், தொலை நோக்குப் பார்வையோடு யோசித்து அறிக்கை தயார் செய்யப்-படவில்லை.


மின்சாரம் தங்குதடையின்றி கிடைத்தால்தான் ஒரு மாநிலம் தொழில் வளர்ச்சியில் தன்னிறைவு பெற முடியும் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், நமது அரசியல்வாதிகளுக்கு மட்டும் அது தெரிவதில்லை. காரணம், மின் உற்பத்தியைப் பெருக்குவதால், அவர்களுக்கு லாபம் எதுவும் கிடைக்காது போல. இன்றைக்கு அரசியல்வாதிகள் அரசியலை வர்த்தகமாக்கி விட்டதன் விளைவுதான் இத்தனையும்.


எந்த வர்த்தகத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் ஒரு குடும்பத்தின் ஆதிக்கம் தலைபட ஆரம்பித்ததால், அந்நிய முதலீடும் உள்நாட்டு முதலீடும் தமிழகத்துக்கு வருவது குறைந்து விட்டது. எந்தத் தனியாரும் பயமில்லாமல் தொழில் செய்ய முடியவில்லை. கேட்டால், ‘ஹூண்டாய் கார் கம்பெனி இல்லையா?’ என்பார்கள். அதிகார மையத்தில் இருப்பவர்கள் கார் வர்த்தகத்தில் நுழையாத வரையில்தான் ஹூண்டாய் கார் தொழிற்சாலை பிரச்னையில்லாமல் இயங்கும். தமிழக மின் வாரியம் இன்றைக்கு கிட்டத்தட்ட செத்துவிட்டது. சுமார் 35,000 கோடி ரூபாய் வரையில் கடனில் இயங்குகிறதாம். அதை நிமிர்த்த ஒரு நடவடிக்கையும் இல்லை. அப்படி இருக்கும்போது மின் உற்பத்தி எப்படி நடக்கும்? இந்த லட்சணத்தில் இலவச மின்சாரத்தை தகுதியில்லாத பயனாளிகளுக்கெல்லாம் அளித்துக் கொண்டிருக்கிறார்கள்.


இலவசங்களை, தொடர்ந்து நாம் அனுமதிக்க... அனுமதிக்க... ஜனநாயகம் என்னும் அற்புதமான விஷயத்-தை நாம் இழந்து கொண்டே இருக்கிறோம் என்பதை மக்கள் புரிந்து கொண்டு, இலவசங்களை தவிர்த்தால் அவர்களுக்கும் நல்லது; நாட்டுக்கும் நல்லது...’’ என்று முடித்தார் ஆடிட்டர் வெங்கடேஷ்.

நன்றி : தமிழக அரசியல்  

0 comments:

Post a Comment