கடமையை செய்
பலனை எதிர் பாராதே!
இது பழ மொழி...
நேற்று நமது கடமையை செய்ய வேண்டிய நாள்
நேற்று எத்தனை பேர் தனது கடமையான வாக்கு சாவடிக்கு சென்று வாக்களிக்கும் கடமையை செய்து இருப்பார்கள். நேற்று பதிவான வாக்குகள் தான் தமிழக தேர்தல் வரலாற்றில் அதிகமாக பதிவான வாக்குகளாம். பெரும்பாலும் படித்தவர்கள் அரசியலை பற்றியும், ஊழலை பற்றியும் ஜனநாயகத்தை பற்றியும் வாய் கிழிய பேசுவார்கள். ஆனால் செயல் என்று வரும்போது நமக்கென்ன நாம் போடும் ஒரு ஓட்டு தான் இந்த ஆட்சியை மற்ற போகிறதா? அல்லது நம் ஒரு ஓட்டு தான் நாம் நினைக்கிற ஆட்சியை தர போகிறதா? என எண்ணி வாக்களிக்க செல்லாமலே இருந்து விடுவார்கள்.
படித்தவர்கள் வாய் கிழிய பேசினாலும் வாக்கு சாவடிக்கு வந்து வாக்களிக்க மாட்டேன் என்கிறார்கள். என்னுடன் படித்த இன்று சென்னையில் IT கம்பெனிகளில் வேலை பார்த்து கொண்டிருக்கும் பலர் வாக்களிக்க வரவில்லை. ஆனால் தேசம் கொள்ளை போகிறது, எங்கும் ஊழல் எதிலும் ஊழல், எதற்கெடுத்தாலும் லஞ்சம் என குற்றம் சொல்லும் இவர்கள் தேர்தல் நாளை சந்தோசமாக கழிக்க சென்னையிலே தங்கி விட்டிருக்கிறார்கள். இவர்களால் அவரவர் சொந்த ஊருக்கு சென்று வாக்களிக்க முடியாதா என்ன? முடியும் ஆனால் கடமையை செய்ய மறுக்கும் இவர்களுக்கு கிடைத்த காரணம் என் வாக்கு மட்டும் எதுவும் மாற்றாது.
ஆனால் எங்கள் ஊரில் இருந்து பெங்களுருக்கு கூலி வேலை செய்ய சென்ற 40 கூலி தொழிலாளர்கள் தனது ஜனநாயக கடைமையாற்ற மூன்று நாள் வேலையை விட்டு சம்பாதித்த பணத்தை செலவு செய்து வாக்களிக்க வந்து சென்ற அவர்களுக்கு இருக்கும் வாக்களிக்க வேண்டும் வாக்களிப்பது நமது கடமை என்ற எண்ணம் கூட இல்லையே படித்த அறிவு ஜீவிகளுக்கு. படிக்காமல் போனாலும் ஜனநாயக கடமையாற்ற வந்த அவர்களின் மேல் மதிப்பும் மரியாதையும் தானாகவே வருகிறது.
படித்தவர்கள் வாய்ச்சொல் வீரர்களாக இல்லாமல் செயல் வீரர்களாக களம் இறங்க வேண்டுமென்பதே என்னுடைய ஆவல்...