கதம்பம்

பார்த்ததும், கேட்டதும், படித்ததும்,

நாம் வாழும் இந்த வாழ்க்கை ஆற்றின் நீரோட்டம் போன்றது. அதைத் தடுத்து நிறுத்துவதால் பயன் ஏதும் ஏற்படாது. ஆனால், வழி மாற்றி வடிகால் அமைத்து பயன்படுத்தினால் பயன் பெறலாம்.


சொர்க்கம் என்பது இறந்தபிறகு தரப்படும் பரிசோ, நரகம் என்பது இறந்தபின்அளிக்கப்படும் தண்டனையோ அல்ல. இவை இரண்டுமே வாழும் போதே மனிதன் அனுபவிக்கும் இருநிலைப்பாடுகளே.


மனமும், புத்தியும் தூய்மையாய் இருக்க இருக்க அந்த மனிதன் எண்ணும் எண்ணங்கள் பிரகாசம் மிக்கதாக இருக்கும். எவனிடத்தில் இந்த எண்ணம் அதிகபட்ச உச்சத்தை அடைகிறதோ அவனே மகான் ஆகிறான்.


பணத்தைக் கொடுப்பது மட்டுமே தானமல்ல. நல்ல உள்ளம் படைத்தவர்கள் பிறரிடம் அன்பு மொழிகளால் கூட தானத்தைச் செய்ய முடியும். ஆண்டவன் எந்த செல்வத்தை தந்திருக்கிறாரோ அதைக் கொண்டு நல்லவனாக வாழ்தலே போதுமானது.


இருள் வந்துவிட்டதே என்று கவலை கொள்வதால் பயனில்லை. ஒரு விளக்கை ஏற்றினால் அது தானாகவே விலகி விடும். அதேபோல் நல்லெண்ணங்களுக்கு இடம் கொடுத்தாலே தீயவை தானாகவே ஒடுங்கி விடும்.

- சின்மயானந்தர்